சட்டசபை ஸ்வீப்பர் பணிக்கு விண்ணப்பபித்த எம்பிஏ மற்றும் என்ஜினியரிங் பட்டதாரிகள் !!
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் பணிக்கு பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரிகள் போட்டிப்போட்டு கொண்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் இடங்களுக்கு தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை அடுத்து துப்புரவு பணியாளர் பணிக்காக சுமார் 4 ஆயிரம் பேர் இந்தப் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் தகுதி உடைய, 3 ஆயிரத்து 930 பேரை நேர்காணலுக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்தது.
இந்தப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோர் பொறியியல், எம்பிஏ மற்றும் கலை அறிவியல் படிப்புகளை படித்த பட்டதாரிகள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுதவிர டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த துப்புரவு பணிக்காக மாதந்தோறும் 15 ஆயிரத்து 700 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் மற்றும் அரசு வழங்கும் இதர பலன்கள், சலுகைகளை பெறலாம் என்ற ஈர்ப்பே, பட்டதாரிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.