துணை ராணுவம் வந்தது ஏன்...? - சிபிஐ அதிகாரி பரபரப்பு தகவல்
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் குறித்து சிபிஐ முன்னாள் அதிகாரி ஒருவர், பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள ராமமோகன் ராவ் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் ஏராளமான செய்தியாளர்களும், பொதுமக்களும் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், மதியம் சுமார் 12 மணியளவில், ராமமோகன் ராவ் வீட்டுக்கு துணை ராணுவ படையினர் வந்தனர். ஆயுதம் ஏந்திய துணை ராணுவப் படையினருடன், தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ முன்னாள் அதிகாரி ரகோத்தமன், செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒரு முக்கிய அல்லது அதிகாரம் மிக்கவர் வீட்டில் சோதனை நடத்தும்போது வருமான வரித்துறையினர் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தும்போது, அவர் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இருக்கும் என்பதால், துணை ராணுவப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும், சில முக்கிய நபர்களின் இடங்களில் சோதனை நடத்தும்போது, ஆதாரங்களை அழிக்கவோ அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களை வெளியே எடுத்து செல்லும்போதோ, வீட்டின் வெளியிலோ, நிற்கும் தொண்டர்கள் சிலர் அதனைபிடுங்கவோ, அபகரிக்கவோ முயற்சிக்கலாம். அதுபோன்ற சம்பவத்தை தவிர்க்கவே, துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவார்கள் என்றார்.