யானையை கருணைக் கொலை செய்யலாம்...! நீதிமன்றம் அனுமதி!
நோய்வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம், சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி (42). இந்த யானை பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமலும் திரும்பி படுக்க முடியாமலும் இருந்தது.
படுத்த படுக்கையாக இருந்த காரணத்தால உணவு உண்ணாமலும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இந்த நிலையில், யானையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சயானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். பரிசோதனை பலன் தராத நிலையில், ராஜேஸ்வரி யானையை கருணைக் கொலை செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
யானை ஆர்வலர் ஓசை காளிதாஸ் இது குறித்து கூறும்போது, தாவரஙகளை உண்டு வாழும் வனவிலங்கான யானை, கோயிலில் வளர்க்கப்படும்போது, பொங்கல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. கோயிலில் வளர்க்கப்படும யானைக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும்
60 அல்லது 70 ஆண்டுகள் உயிர் வாழும் யானை, குறைந்த வயதில் உயிரிழிக்கிறது என்றால், தவறான முறையில் வளர்க்கப்பட்டுள்ளது என்றார்.
புத்துணர்வு முகாம்களுக்காக நீண்ட தூரம் யானைகள் கொண்டு வரப்படுவது தவறு. யானை பாகன்களுக்கு உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமாகத்தான் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் சிறந்த முறையில் வளர்க்கப்படும் என்று ஓசை காளிதாஸ் கூறியுள்ளார்.