அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக தர்ணா போராட்டம்...
கடலூர
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவ - மாணவிகள் கடந்த 10-ஆம் தேதி முதல் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 4-வது நாளாக மாணவர்களின் இந்தப் போராட்டம் நீடித்தது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ - மாணவிகள் நேற்று காலை 10 மணிக்கு வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலை யை மூட கோரியும்" கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர்கள் தரையில் அமர்ந்து நடத்திய இந்த தர்ணா போராட்டம் மாலை 4 மணி வரை நீடித்தது. இதையடுத்து மாலை 4 மணியளவில் மாணவர்கள் அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.