பல ஆக்கிரமிப்பு புகார்கள் கொடுத்தும் சட்டத்திற்குப் பயப்படாமல் தொடர்ந்து சமூக விரோதச் செயல்களை செய்யும் தைரியம் திமுகவினருக்கு எங்கிருந்து வருகிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக நிர்வாகியின் நில அபகரிப்பு
திமுக அரசின் செயல்பாட்டுக்கு எதிராக அண்ணாமலை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் கூறிவருகிறார். இந்த நிலையில் நில அபகரிப்பு செய்த திமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியில் உள்ள திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான பேச்சி பாண்டியன் எனும் நபர்,
இன்னொருவருக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்து, அதனை எதிர்த்த நில உரிமையாளர்கள் தந்தை, மகன் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார். இவரது தாக்குதலில் காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், நிலத்தின் உரிமையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பேச்சி பாண்டியன் மீது, இதுவரை நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி வருகிறது திமுக. இவர் மீது மேலும் பல நில ஆக்கிரமிப்புப் புகார்கள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், சட்டத்திற்குப் பயப்படாமல் தொடர்ந்து சமூக விரோதச் செயல்களை செய்யும் தைரியம் இவருக்கு எங்கிருந்து வருகிறது?
உடனடியாக, காவல்துறை இந்த நபரைக் கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். திமுக ஆட்சி என்றாலே நில ஆக்கிரமிப்பு என்பது இத்தனை ஆண்டு கால வரலாறாக இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
