சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ததற்காக இரண்டு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக எம்எல்ஏ கதிரவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டிக்கு கடன் வாங்கிய ஏழை கூலி தொழிலாளிகளை குறிவைத்து திமுகவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று பேரம் பேசி சிறுநீரகங்களை திருடியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆனந்தன் தலைமறைவானார். அதை தொடர்ந்து சுகாத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஏழை மக்கள் ஐந்து லட்சத்துக்கு 10 லட்சத்திற்கும் கிட்னியை விற்ற பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தது.

கிட்னி திருட்டு

இதை தொடர்ந்து முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்காக திருச்சி சிதார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை உரிமையாளர் சீனிவாசனின் மகனும் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏவுமான கதிரவன் தன் தொகுதியில் உள்ள திருப்பட்டூரில் மக்களுக்கு விருந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நிர்வாகி ஒருவர் கிட்னி ஆபரேஷன் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய கதிரவன் எப்போது காசு கம்மியாக இருக்கிறதோ அப்போது கிட்னியை எடுத்து விடுவோம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

வெட்கமின்றி பெருமை பேசுகிறார்

இந்நிலையில் திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிட்னி திருடியது குறித்து மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டு பேசுகிறார். ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க திருப்பட்டூரில் மக்களின் ஒட்டுமொத்த கிட்னியையும் திருட வேண்டும் என்கிறார்.

Scroll to load tweet…

ரூ.7.5 கோடி சம்பாதித்தேன்

இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன. மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்எல்ஏவே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், திமுக அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.