தமிழகத்தில் 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம் செலுத்தப்படாததால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு நிதிநிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி நிலையங்களில் இணையதள வசதி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்போதைய கல்வி திட்டங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ளும் அளவில் இணையதள வசதிகள் மாவட்ட கல்வி அலுவலங்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதள கட்டணம் கட்டாத காரணத்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், 

8.5 லட்சம் கோடி கடன்

மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. திமுக ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சிஏஜி தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

திவால் ஆகும் நிலையில் தமிழகம்

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70% நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.