செவிலியர்கள் கைது: அண்ணாமலை கண்டனம்!
செவிலியர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர்களை உடனடியாக விடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

தொகுப்பூதியம் பெறும் எம்.ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 11 புதிய மருத்துவமனைகளில் 2ஆம் கட்ட செவிலியர் பணிகளை நிரந்தரமாக நிரப்ப வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு முறையாக பணிக்கான கலந்தாய்வு நடந்திட வேண்டும். கொரோனா கால கட்டத்தில் காலமுறை ஊதியத்தில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிவரையறை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தின் முன் எம்.ஆர்.பி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து இன்று பேச்சு வார்த்தைக்கு அழைத்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அனுமதி இல்லாமல் போராட்டம் செய்ய முயன்றதால் செவிலியர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவிலியர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவர்களை உடனடியாக விடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொலீஜியம் பரிந்துரைகள் விரைவில் அறிவிப்பு: மத்திய அரசு உறுதி!
இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்திருக்கிறது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல அடாவடியாகக் கைது செய்திருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன?
உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.