செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்ததை கவனிக்காமல், அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்துள்ளதாக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்ததைக்கூட கவனிக்காமல், அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்துள்ளார் என்று பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் பங்கேற்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனை விமர்சித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசியக்கொடிக்கு அவமரியாதை:

“செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் தாமதமாக கலந்து கொண்டார். மேலும், மின்சாரம் தடைபட்டதால், பள்ளி மாணவ, மாணவியரை சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்கச் செய்தார். அதற்கும் மேலாக, தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருப்பது கூடத் தெரியாமல், தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்திருக்கிறார்.” என அண்ணாமலை கூறியுள்ளார்.

தேசியக்கொடி பற்றித் தெரியாதா?

அண்ணாமலை தனது அறிக்கையில் மேலும், "அமைச்சர் தா. மோ. அன்பரசனுக்கு தமிழ் மொழியில் பிழையின்றி எழுதத் தெரியாது என்பது, ஏற்கனவே ஒரு பள்ளி நிகழ்ச்சியில் தெரிந்தது. தேசியக் கொடி குறித்தும் எதுவும் தெரியாது என்பது தற்போது தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்வி நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்:

இறுதியாக, "அமைச்சர் தா. மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது, நமது மாணவச் செல்வங்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்" என்று அண்ணாமலை கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.