மதுரை அழகர் கோயிலிலும், கோவை மருதமலை கோயிலிலும் தினமும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயில் என மொத்தம் 12 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 760 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.110 கோடி செலவிலான இந்த திட்டத்தால் ஆண்டுதோறும் சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயனடைந்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை (BHOG) 523 திருக்கோயில்கள் பெற்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது. 

தற்போது மதுரை அழகர் கோயிலிலும், கோவை மருதமலை கோயிலிலும் தினமும் அன்னாதானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், மதுரை அழகர் கோயில் அன்னதான கூடத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

இந்த திட்டம் தொடங்கப்பட்டதன்மூலம் இனிமேல் கோவை மருதமலை கோயிலிலும், மதுரை அழகர் கோயிலிலும் இனி தினமும் அன்னதானம் நடைபெறும். இந்த இரண்டு கோயில்களுக்கும் செல்லும் பக்தர்கள் இறைவனை மனதார வழிபட்டு பசியாறி வரலாம். இந்த திட்டத்துக்கு கோவை, மதுரை பக்தர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.