Asianet News TamilAsianet News Tamil

சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டு.. விரைவில் தீர்ப்பு.. தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு..

நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

Anna University Ex VC Surappa case
Author
Tamilnádu, First Published Jan 10, 2022, 6:59 PM IST

நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அதுதொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை நியமித்து முந்தைய அதிமுக அரசு உத்தரவிட்டது.

இந்த ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து சூரப்பா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. நீதிபதி கலையரசன் ஆணைய அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தாக்கல் செய்த நிலையில், அதன் நகலை சூரப்பாவுக்கு வழங்கலாமா என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விசாரணையின் அறிக்கையை பல்கலைகழக வேந்தரான ஆளுநருக்கு மட்டுமே அனுப்பி உள்ளதாகவும், அதை சூரப்பாவிற்கு தர இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் அறிவுரைப்படி 3 மாதங்களில் அவர் முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி, அறிக்கையை வழங்க ஏன் அரசு தயங்குகிறது என கேள்வி எழுப்பியதுடன், வேந்தர் முடிவெடுப்பதற்கு முன்பாக வழங்கினால் தான் சமபந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பளிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், அறிக்கை வழங்க மறுக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில், வேந்தர் என்ற அடிப்படையில் அவரது பணி சட்டபூர்வமான பணி என்றும், அரியலமைப்புச் சட்ட பணி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது சூரப்பா தரப்பில் தனக்கு எதிரான விசாரணை ஆணையம் அமைக்கபட்டதே வேந்தரின் கவனத்திற்கு கொண்டு செல்லபடவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios