andiyur mla rajakrishnan drive government bus from andiyur to erode

பஸ்களை எடுங்கள், இயக்குங்கள், மக்கள் சிரமப் படுகிறார்கள் என்று, போக்குவரத்து ஊழியர்களிடம் கெஞ்சிப் பார்த்தார். அவர்கள் எடுப்பது போல் தெரியவில்லை, மறுத்தார்கள். வேறு வழியின்றி தானே களத்தில் இறங்கினார் அந்தியூர் எம்.எல்.எ., ராஜாகிருஷ்ணன். தன் ஓட்டுநர் உரிமத்தை போலீஸாரிடம் காட்டினார். அனுமதி பெற்றார். பஸ்ஸில் ஏறினார். ஸ்டியரிங்கைப் பிடித்தார். பஸ்ஸை இயக்கத் தொடங்கினார். 

ஈரோட்டில் இருந்து அந்தியூர் வரை அவர் பஸ்ஸை மிகவும் ஸ்டைலாக ஓட்டிக் கொண்டே வந்தார். அவருடன் சிலர் பேச்சுக் கொடுத்தே வந்தனர். வழக்கமான ஓட்டுநர் சீருடையில் பேருந்தின் ஓட்டுனர் இருக்கையில் இருப்பவரைப் பார்த்துப் பழகியவர்கள், வெள்ளைச் சட்டையும் நெற்றியில் குங்குமமும் வைத்துக் கொண்டு ஸ்டைலாக ஓட்டுநர் இருக்கையில் இருப்பவரைப் பார்த்து சற்றே வியந்து தான் போனார்கள். 

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, போனஸ் விஷயத்தில் அரசுத் தரப்புடன் பேச்சு வார்த்தையில் சுமுக முடிவு எட்டப் படாததால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், அதற்கு அடுத்த சிறு நகரங்களிலும் என பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஈரோடு பணிமனைக்கு இன்று காலை ஆய்வு மேற்கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏ ராஜகிருஷ்ணன், அங்கிருந்த பேருந்தை இயக்குமாறு போக்குவரத்து ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தார். அவர்கள் மறுத்ததால் தனது ஓட்டுநர் உரிமத்தை போலீஸாரிடம் காட்டிவிட்டு ஈரோடிலிருந்து அந்தியூர் வரை அரசுப் பேருந்தை இயக்கினார். இது பலரையும் ஆச்சரியப் படுத்தியது.