கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது,தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் தான் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணமாக இருக்கும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. மாணவர்கள் தேர்வை அச்சமில்லாமல் எழுத வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. அதில் தேர்வு அறையில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை. மீறினால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிடிபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளோடு நேற்று தேர்வு தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 50ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதாமல் புறக்கணித்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்வு எழுதாத 50ஆயிரம் மாணவர்கள்
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது இதுவே முதல் முறை. இது அதிர்ச்சியளிக்கிறது! கொரோனா பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதாதது, தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்படாதது போன்றவற்றால் ஏற்பட்ட அச்சம் ஆகியவை தான் பெரும்பான்மையான 12-ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் தேர்வையே எழுதாததற்கு காரணம் என்று உளவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்!
மாணவர்கள் அச்சத்தை போக்க வேண்டும்
அச்சம் காரணமாக அடுத்து வரும் தேர்வுகளையும் இந்த மாணவர்கள் எழுதாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பதால், இந்தப் போக்கிற்கு முடிவு கட்ட தமிழக அரசின் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! தமிழ் மொழிப்பாடத்தாள் தேர்வை எழுதாத மாணவர்களின் பட்டியலை வட்ட அளவில் தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் அடுத்து வரும் தேர்வுகளை தவறாமல் எழுதுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை..! தொடரும் மரணத்திற்கு காரணம் என்ன.? போலீசார் விசாரணை
