சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் விடவும் அனுமதி..
ஒகேனக்கலில் அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் செல்வதற்கும் சுற்றுலா பயணிகளுக்கு தருமபுரி ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கபினி மற்றும் கேஆர்எஸ் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்ததால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதேபோல் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் பலத்த மழையினால் காவிரியின் துணை ஆறான தொட்டல்லா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.55 லட்சம் கன அடி வீதம் நீர் வரத்து அதிகரித்தது.
மேலும் படிக்க:கோவை கார் வெடி விபத்து..! களத்தில் இறங்கிய என்ஐஏ..! சம்பவ இடத்தில் விசாரணை நடத்த திட்டம்
ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள நடைபாதை, பரிசல்துறை, கரையோர பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விளை நிலங்கள் நீரில் மூழ்கின. இதனையடுத்து காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் ஒகேனக்கலில் உள்ள அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் விடவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இரு மாநில காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறந்துவிடும் நீர் அளவும் சரிந்துள்ளதுள்ளது. தமிழக நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்ததால், காவிரி ஆற்றில் வெள்ளம் வடிந்தது. இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனையடுத்து 13 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார்.
மேலும் படிக்க:விபத்தில் சிக்கிய பாமக தலைவர் அன்புமணியின் மனைவி.. சிறிய காயமின்றி உயிர் தப்பினார்..!