பொங்கலுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவில்கள்... குவிந்த பக்தர்கள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி !!
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 14 முதல் 18ம் தேதி வரை வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பொங்கல் கொண்டாட்டங்களையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லவில்லை. இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு, பொதுமக்கள் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வழக்கமாக நடத்துவார்கள்.
ஆனால் கோவில்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்தனர்.அதேபோல கிறிஸ்தவ தேவாலயங்களும், மசூதிகளும் மூடப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் காலை முதலே சாமி தரிசனத்திற்காக வழிபாட்டு தலங்களில் குவிய தொடங்கி விட்டனர். மேலும், தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியீடுடப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்குள் உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் திருமணம், இறுதிச்சடங்குகளுக்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.