ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதாகவும், அமைதி போராட்டம் நடத்தும்படி எஸ்பி கூறியதை மறுத்த மக்கள், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அலங்கா நல்லூரில் நேற்று போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடத்திய வாலிபர்களை, போலீசார் கைது செய்து, வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வாலிபர்களை கைது செய்ததை கண்டித்து, அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி பகுதி மக்கள் பேரணியாக சென்று இன்று காலை, வாடிப்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு பிரிவினர் அலங்காநல்லூரில் உள்ள கேட்கடை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் கைது செய்யப்பட்டவர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.

அப்போது அங்கு வந்த எஸ்பிப விஜயேந்திர பிதரி, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். அமைதியான போராட்டத்துக்கு போலீசார் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என உறுதியளித்தார். ஆனாலும், அதனை பொதுமக்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.