அதிமுக எம்எல்ஏக்கள் டி.டி.வி. தினகரன் தலைமையில் செயல்பட விருப்பமாக உள்ளனர் - பூந்தமல்லி எம்எல்ஏ...
திருவள்ளூர்
அதிமுக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் டி.டி.வி. தினகரன் தலைமையில் செயல்பட விருப்பமாக உள்ளனர் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை தெரிவித்துள்ளார்.
திருத்தணி நகர ஒன்றிய டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை பேசியது:
"ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டபோது சசிகலா போராடி இந்த ஆட்சியைத் தக்கவைத்தார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாடுபட்டவர் டி.டி.வி. தினகரன். ஆனால், முதல்வராக பதவி ஏற்ற சில நாள்களிலேயே பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துகொண்டு பாஜகவின் பினாமிஅரசாக செயல்படுகின்றனர். இதனால் அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
டிடிவி தினகரன் மட்டுமே அதிமுகவை வெற்றிப்பாதையில் வழி நடத்திச் செல்ல முடியும் என்று அதிமுகவில் அனைவரும் நம்புகின்றனர்.
இந்த ஆட்சி எந்தநேரத்திலும் கவிழும் சூழ்நிலை உள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் டி.டி.வி. தினகரன் தலைமையில் செயல்பட விருப்பமாக உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில், திருத்தணி நகரச் செயலாளர் கருணாகரன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் வழக்குரைஞர் தியாகராஜன், நகர இளைஞரணிச் செயலாளர் அசேன், ஒன்றியப் பொறுப்பாளர் சத்யா, ஆர்.கே.பேட்டைஒன்றியச் செயலாளர் குமார், பொதட்டூர்பேட்டை இ.எம்.எஸ். நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.