இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இப்போதுதான் சேலத்தில் முதல் பெண் ஆட்சியர் நியமனம்…
சேலம்
இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இப்போதுதான் முதல் முறையாக சேலம் மாவட்டத்தின் முதல் முறையாக ஆட்சியராக பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் வா.சம்பத். அவர் தற்போது சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மதுரை மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாகவும் கூடுதல் ஆட்சிராகவும் பணியாற்றி வந்தவர். இவர் சேலம் மாவட்டத்தின் 171-வது ஆட்சிராக பதவி ஏற்கிறார்.
அதுமட்டுமின்றி நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் இவர்தான் என்பதும் முக்கியமான ஒன்று.
சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி ஆர்.பாஜிபாகரேயின் கணவர் விஜயேந்திரபிதாரி. இவர் ஐபிஎஸ் அதிகாரி. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். தற்போது மத்திய புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் மராட்டிய மாநிலம் சோலாப்பூர்.
விவசாய குடும்பத்தை சேர்ந்த ரோகிணி, புனேவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். 2008-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் உதவி ஆட்சியராக பணியைத் தொடர்ந்தார்.
பின்னர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராகவும் கூடுதல் ஆட்சிராகவும் பணியைத் தொடர்ந்தார்.
தற்போது சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள ரோகிணி, வருகிற திங்கட்கிழமை பொறுப்பு ஏற்கலாம்.