ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தாராபுரம்,

தாராபுரத்தில்பள்ளி பள்ளி முடிந்த வீடு வந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஜவகர்நகரை சேர்ந்தவர் முருகன். துப்புரவு தொழிலாளி. இவரது மகள் சந்தியா (14). அதே பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 9–ஆம் வகுப்பு படித்து வந்தாள். புதன்கிழமை மாலை சந்தியா பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், வீட்டின் மேல்மாடிக்கு சென்று, அங்கிருந்த தனியறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பள்ளியில் இருந்து சந்தியா வந்ததும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், பள்ளியில் சந்தியாவின் ஆசிரியர்கள் அவரை திட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் சந்தியாவின் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் சந்தியாவின் உடலை அவருடைய உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் சந்தியாவின் வகுப்பில் படிக்கும் சக மாணவிகளிடம் வகுப்பில் என்ன நடந்தது என்று விசாரணை நடத்த வேண்டும், அதன்பிறகுதான் உடலை வாங்குவோம் என்று அவரது உறவினர்கள் கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு உமா நேரில் வந்து விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து துணை காவல்துறை சூப்பிரண்டு ஜெரினாபேகம், இன்ஸ்பெக்டர் முருகேசன், தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி ஆகியோர் சந்தியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று சந்தியாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு சந்தியாவின் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.