"சினிமா டிக்கெட்டுக்கு எப்போதும் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்கப்படும்" - அபிராமி ராமநாதன் பேட்டி
ஜி.எஸ்.டி. மற்றும்வ கேளிக்கை வரி விதிப்பால் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளின் விலை உயரும் என்பதால், கடந்த 3 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரே வரி விதிப்பை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று அமைச்சர்களுடன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், 4 நாட்களாக திரையரங்குகள் மூடியிருந்தது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பால் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
சுமார் ஆயிரம் திரையரங்குகள் 4 நாட்களாக மூடியிருந்தன. திரையரங்குகளில் காட்சிகள் நிறுத்தப்பட்டதால் நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கேளிக்கை வரி குறித்து 4 நாட்களாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
எங்களின் சிரமங்களை அமைச்சர்கள் புரிந்து கொண்டுள்ளனர். புதிய வரி விதிப்பது குறித்து தீர்மானிக்க 12 பேர் கொண்டு குழு கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலையில் இருந்து திரையரங்குகள் எப்போதும் போல் இயங்கும். எப்போதும் வசூலிக்கும் கட்டணமே நாளையும் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.