கள்ளக்காதலால் சிதைந்துபோன குடும்பம்! கள்ளக்காதலியுடன் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!
திருப்பத்தூர் அருகே என்ஜினியர் ஒருவர் கள்ளக்காதலியுடன் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பா.முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் பிரபு (29). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் சண்முகத்தின் மகள் நித்யாவும் (24) காதலித்து, குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.
இதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் எழில் (25). இவர் என்ஜினியராக உள்ளார். இவருக்கும் நித்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் அவதூறாக பேசியுள்ளனர். அது மட்டுமல்லாமல் இருவர் முன்பாகவும் அவர்கள் பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை குடும்பத்தினரும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் எழில், கள்ளக்காதலி நித்யாவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரைவிட்டு தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
நேற்று அதிகாலை திருவண்ணாமலை செல்லும் சாலையில் விஷமங்கலம் என்ற ஊரின் அருகே உள்ள ஏரிக்கரையில், இருசக்கர வாகனம் ஒன்று நிற்பதாகவும், அதன் அருகில் ஆணும், பெண்ணும் மயங்கிய நிலையில், அவர்கள் இருந்துள்ளனர்.
அப்போது, நித்யா இறந்து கிடந்துள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் எழில் இருந்துள்ளார். இது குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த என்ஜினியர் எழிலை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட எழில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார், இவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன நித்யாவின் கணவர் பிரபுவை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.