தோழி இறந்த சோகத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 1 மாணவி; பெற்றோர்கள் கதறல்...
விழுப்புரம்
விழுப்புரத்தில் மர்ம காய்ச்சலால் தோழி இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் இருந்த பதினோறாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அருகே உள்ள செம்மனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவருடைய மகள் பிரசாந்தி (16) உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினேறாம் வகுப்பு படித்து வந்தார்.
அவருடன் அதேபள்ளியில் படித்து வந்த தோழியான ஆவலம் கிராமத்தைச் சேர்ந்த ரசிகா (16) என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.
தோழி இறந்த சோகத்தில் இருந்த பிரசாந்திக்கு அவருடைய பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் பிரசாந்தி வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமலும், சரியாக சாப்பிடாமலும் மன வேதனையுடன் இருந்தார்..
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் தனது மனைவி, மகளுடன் படுத்துத் தூங்கினார். மறுநாளான நேற்று அதிகாலை எழுந்த வேல்முருகன் அருகில் படுத்திருந்த மகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் பிரசாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த வேல்முருகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த திருநாவலூர் காவலாளர்கள் பிராசாந்தி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தோழி இறந்த துக்கத்தில் பதினோறாம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.