ஓபிஎஸ் உடன் மோடி, அமித் ஷா..! காஞ்சிபுரத்தில் அதிமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரில் ஓபிஎஸ் உடன் மோடி, அமித் ஷா இருக்கும் புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவை தமிழகத்தில் மட்டுமில்லாமல் நாட்டிலேயே மிகப்பெரிய 3 வது கட்சியாக உருவாக்கியவர் மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சட்டமன்ற தேர்தல்,நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு சவால் விடுத்து மோடியா இல்லை இந்த லேடியா என பிரச்சாரம் செய்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. இதனையடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவோடு கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது.. இருந்தபோதும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவிற்கு பின்னடைவையே கொடுத்துள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களையும் நீக்கி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் பாஜக மேலிடம் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இன்று சென்னை வரும் மோடி அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாக இரு தரப்பிலும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஓபிஎஸ் தரப்பு சார்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் ஓபிஎஸ், மோடி, அமித்ஷா ஆகியோர் இருக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்
கார் விபத்தில் சிக்கிய திமுக MLA..! கையில் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி