Heavy Rain : ஊட்டியில் கொட்டித்தீர்க்கும் மழை... நிரம்பியது அணை- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![A flood warning has been issued as the water has been released after the Pillur dam was full KAK A flood warning has been issued as the water has been released after the Pillur dam was full KAK](https://static-ai.asianetnews.com/images/01h66mtza8ryfrpzmq7zs4q66g/pillur-dam_363x203xt.jpg)
கன மழை- பில்லூர் அணை நிரம்பியது
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகயில் வெயிலின் தாக்கமானது உச்சத்தை தொட்டது. இதனால் பெரும்பான அணைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. இந்தநிலையில் பருவமழையின் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய பில்லூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
குறிப்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக இருக்கக்கூடிய கேரளா அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அணைக்கான நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 97 அடி என்ற இலக்கை எட்டியது.
கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நான்கு மதங்கள் வழியாக தற்பொழுது நீர் வரத்தான 14000 கன அடி நீர் அப்படியோ பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சினம்பளையம், லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என கூறப்படுவதால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் வருவாய்த் துறையினர் தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.