மு.க.ஸ்டாலினின் கோரிக்கைக்கு செவிசாய்த்தது மத்திய அரசு… தமிழகத்துக்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்துக்கு விரைவில் வர உள்ளது.
தமிழக விவசாயிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தங்களுக்கு யூரியா தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தமிழகத்திற்கு போதுமான அளவிற்கு யூரியா உரம் ஒதுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 90,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் மாத இறுதிக்குள் ஸ்பிக் 10,000 மெட்ரிக் டன் மற்றும் எம்.எப்.எல் நிறுவனம் 8,000 மெட்ரிக் டன் யூரியா வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் காரைக்காலில் இருப்பில் உள்ள 4,000 மெட்ரிக் டன் யூரியா உரம் தமிழகத்தின் மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கிய யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்துக்கு விரைவில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.