வைகை ஆற்றில் தொடரும் உயிரிழப்பு...! ஒரே வாரத்தில் 9 பேர் பலி... அதிர்ச்சியில் பொதுமக்கள்
மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி 10நாட்களில் 9பேர் நீரில் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5பேர் உட்பட 7பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வைகையில் நீரோட்டம் அதிகரிப்பு
பருவமழை காரணமாக பல்வேறு நீர் பிடிப்பு இடங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக மேட்டூர், வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரில் இறங்கி குளிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனையும் மீறி ஒரு சிலர் தண்ணீரில் குளிப்பதால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மதுரை வைகையாற்றில் நீரின் வேகமானது அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கைகளை மீறி பொதுமக்கள் குளிக்க செல்வதால் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த 9ஆம் தேதி சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றில் குளித்த திருமங்கலம் கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வினோத்குமார் 25, அன்பரசன் 24 ஆகிய இருவரும் ஆற்றில் உயிரிழந்தனர். மேலும் இருவரின் உடலை தேடும் போது அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் உடலும் மீட்கப்பட்டது.
விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம்...! தொண்டர்கள் இதை செய்ய வேண்டாம்.. சசிகலா திடீர் உத்தரவு
அதிகரிக்கும் உயிரிழப்பு
இந்நிலையில் நேற்று மாலை துவரிமான் முத்தையா சுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்த மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த தனசேகரன் (23) திருமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (20) ஆகிய இருவரும் துவரிமான்-பரவை வைகை ஆற்று பாலத்தின் கீழே குளித்துகொண்டிருந்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனிடையே இருவரின் உடலை தேடும்பணியில் 2ஆவது நாளாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை மதுரை வண்டியூர் அருகே தேனூர் மண்டபத்தின் அருகிலும், செல்லூர் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதியிலும் மிதந்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத இருவரின் உடலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதேபோன்று கடந்த வாரம் வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும்
மதுரை வைகை ஆற்றில் கடந்த 10நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 9பேர் நீரில் மூழ்கிய நிலையில் 7பேருடைய சடலங்களில் 5பேர் உடல் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் காணாமல் போன இருவரின் உடலை தீயணைப்புத்துறையினர் தேடிவருகின்றனர். வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வைகை ஆற்று கரையோரங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாத உடல்களை மீட்கும் போது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது..
இதையும் படியுங்கள்
கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரபரப்பு உத்தரவு