திடீரென மூடப்பட்ட சாராயக் கடைகள்; ஏமாற்றத்துடன் திரும்பிய குடிகாரர்கள்... இது எத்தனை நாளைக்கோ?
நாமக்கல்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைகளாக மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத பகுதியில் இருந்த 40 சாராயக் கடைகள் திடிரென மூடப்பட்டதால் குடிகார்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து, அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடாமல், அந்த சாலைகளில் சாராய கடைகள் திறக்கப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட கடைகளை உடனடியாக மூட வேண்டும்" என்று இருந்தது.
அந்த உத்தரவின்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத பகுதியில் இருந்த மொத்தம் 40 சாராயக் கடைகள் மூடப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 178 சாராயக் கடைகள் இயங்கி வந்தன. அவற்றில் நகராட்சி பகுதியில் 35 சாராயக் கடைகள், பேரூராட்சி பகுதியில் 5 சாராயக் கடைகள் என மொத்தம் 40 சாராயக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டன.
நாமக்கல் நகரப் பகுதியில் திடிரென 10-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகள் மூடப்பட்டு இருந்ததால் இந்தக் கடைகளுக்கு வந்த குடிகாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிந்தது.
இதனிடையே நேற்று நாமக்கல்லுக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பா.ம.க. வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர், "உயர்நீதிமன்றம் உத்தரவின்படி சாராயக் கடைகளை மூட மறுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், உயர்நீதிமன்ற தீர்ப்பு மீது எந்த உத்தரவும் வழங்க கூடாது என்று பா.ம.க. சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும்" என்று கூறினார்.