4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை - 3 பேர் உடல்கள் மீட்பு...!
அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியில் 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி. இவர்கள் 4 பேரும் பணப்பாக்கத்தில் உள்ள ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11ம் வகுப்புப்படித்து வந்தனர்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றனர். ஆனால் மாணவியர் நான்கு பேரும் பள்ளியில் இருந்து திடீரென மாயமாயினர். இவர்களில் மூன்று பேரது பைகள் மட்டும் பள்ளி வகுப்பறையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பள்ளியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே இரண்டு சைக்கிள்களும், ஒரு பையும் இருப்பதைப் பார்த்து போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விவசாயக்கிணற்றுக்குள் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் தீபா, சங்கரி உள்ளிட்ட 3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு மாணவியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
காணாமல் போன மாணவியரில் ஒருவரான மனிஷா, பள்ளியில் ஆசிரியர் திட்டியதாக வீட்டில் பெற்றோரிடம் புகார் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது.