சத்தீஸ்கர் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
Tamil Nadu family death : வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து பல பேர் உயிரிழந்து வருகிறார்கள். இந்த நிலையில் சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ராஜேஷ்குமார் (45) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து சத்தீஸ்கரில் தனது குடும்பத்தை அழைத்து சென்றவர் அங்கேயே வசித்து வருகிறார்
வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம்
தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அங்கேயே பள்ளியில் சேர்த்தும் உள்ளார். இந்த நிலையில் ராஜேஷ்குமாரை திருப்பதி கோவிலுக்கு செல்ல குடும்பத்தினர் அழைத்ததன் காரணமாக நேற்று சத்தீஸ்கரில் இருந்து ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா (38) மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகிய 4 பேரும் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் மழை வெள்ளம் காரணமாக அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. ஒரு கடத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் காரில் பயணித்த 4 பேரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் வெள்ளத்தில் சிக்கிய காரை மீட்ட போது அந்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்து, பிரேத பரிசோதனை முடிந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. 4 பேரின் உறவினர்களும் கதறி துடித்து வருகிறார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
