விஷவாயு தாக்கி கோவையில் மூன்று இளைஞர்கள் பரிதாப பலி..! போலீஸ் விசாரணை..!
கோவையில் தங்கப்பட்டறையில் கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஃபாதர் ரேண்டி சாலையில் ஏராளமான தங்கப்பட்டறைகள் உள்ளன. அவற்றில் ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமான தங்கப்பட்டறையில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை ஏழுமலை, சூர்யகுமார், கௌரிசங்கர் ஆகிய 23 வயதுடைய மூன்று இளைஞர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் ஏழுமலையும் கௌரிசங்கரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சூர்யகுமாரும் உயிரிழந்தார். மூவரின் உயிரிழப்பும் அவர்களது குடும்பத்தினரிடையே கடும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாமல், ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுவதால்தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கழிவுநீர்த்தொட்டி சுத்தம் செய்வதில் அனுபவம் இல்லாதவர்களை அப்பணியில் ஈடுபட வைத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.