அன்று கோபாலபுரத்தில் மோடி! இன்று 2ஜியில் கனிமொழி விடுதலை! நாளை கோட்டையில் தி.மு.க!
இந்தியாவை பொறுத்தவரையில் அரசியலின் சூழ்நிலை தலைகீழாக மாற ஒரு சிறிய சந்திப்பு, ஒரு சிறிய டீ பார்ட்டி, சின்ன அழுகை, சிறிய கோபம் ஆகியவை போதும். அந்த வகையில் அன்று மோடி கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தது இன்று 2ஜி வழக்கின் முடிவில் எதிரொலித்திருக்கிறதோ என்று? விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் தினத்தந்தி நாளிதழின் பவளவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி திடீர் விஜயமாக கோபாலபுரம் வந்து உடல் சுகவீனமாயிருந்த கருணாநிதியை சந்தித்தார். இதற்கு முன் பல முறை மோடி சென்னை வந்திருந்தும், அப்போதெல்லாம் இதை விட மோசமான நிலையிலிருந்த கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இவ்வளவு ஏன் அப்பல்லோ சென்று ஜெ.,வையும் பார்க்கவில்லை.
இந்நிலையில் மோடி கோபாலபுரம் வந்ததும், அவர் விசிட்டின் போது கனிமொழி வளைய வளைய அங்கேயே நின்றதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனிமொழி எப்படி பிரதமரின் அருகில் இருக்கலாம்? தி.மு.க. தலைவரின் இல்லத்துக்கு மோடி சென்று சந்திக்க வேண்டிய அவசியமென்ன? என்றெல்லாம் பேசினார்கள்.
ஆனால் இன்று ஸ்பெக்டரம் வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அத்தனை பேரும் விடுதலையாகி இருக்கிறார்கள். ஆக இப்படியொரு தீர்ப்பை எதிர்பார்த்தோ அல்லது முன்பே உணர்ந்திருந்தோதான் பிரதமர் அன்று கோபாலபுரம் சென்றாரோ? என்று தீர்ப்பின் உச்ச நொடிகளில் விமர்சகர்கள் பேசுகிறார்கள்.
அதேபோல் கடந்த எட்டு ஆண்டுகளாக ஸ்பெக்டரம் சகதியில் தத்தளித்துக் கொண்டிருந்த தி.மு.க. இன்று இந்த தீர்ப்பின் மூலம் கறைகள் கழுவப்பட்டு சந்தோஷப்பட்டு, தன்னை ‘சுத்தமானவன்’ என்று நிரூபித்திருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் இனி அதற்கு அரசியலில் ஏறுமுகமே என்கிறார்கள். கோட்டையில் தி.மு.க. சென்றமரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் மோடியின் விசிட்டுக்கும் இந்த தீர்ப்புக்கும் எந்த வகையிலும் முடிச்சுப் போடக்கூடாது என்று பி.ஜே.பி.யினர் புலம்பிக் கொட்டுகின்றனர். ‘
ஆனால் இதை ஏற்க முயலாத விமர்சகர்கள் ”தமிழகத்தில் இனி பி.ஜே.பி. தி.மு.க.வோடு கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.” என்கிறது.
கவனிப்போம்.