2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு… டி.டி.வி.தினகரன் வரவேற்பு….
2ஜி வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோரை விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை டி.டி.வி.தினகரன் வரவேற்றுள்ளார்.
கடந்த 2004-2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதமே விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். 2ஜி வழக்கிலிருந்து ஆ.ராசா, கனிமொழி எம்பி உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி சைனி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் 2 ஜி வழக்கில் ஆ.ராசா மற்றும் கன்மொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு டி.டி.வி.தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கைப் பொறுத்தவரை திமுக மீது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மிகக் கடுமையாக குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசி டி.டி.வி.தினகரன், நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், ஆ.ராசா. கனிமொழி விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் கூறினார்.
2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி. தமிழர்களாக இருந்து விடுதலை பெற்றது மகிழ்ச்சி. எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.