புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 9 பேர் விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பாலமுருகன் மற்றும் அரவிந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் உடனடியாக அவசர அவசரமாக அங்கிருந்து கரைக்கு திரும்பினர். பின்னர் காயமடைந்த 2 மீனவர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த இருநாட்டு மீனவ பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில்,
இனி தமிழக மீனவர்களை சிறை பிடிக்க மாட்டோம், தாக்கமாட்டோம் என என இலங்கை அமைச்சர்கள் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
