12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்காத திமுக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடைகள் எனப்படும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நடுத்தர மக்களுக்கு, ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்களே வாழ்வாதாரமாக உள்ளது. ரேஷன் அரிசியில் கல், தவிடு, வண்டுகள் இருப்பது போன்ற புகார்கள் ஒருசில இடங்களில் இருந்து வருகின்றன.

ரேஷன் கடைகள் மீது தொடர் புகார்கள்

இது மட்டுமின்றி துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் தரம் சில சமயங்களில் சரியாக இருப்பதில்லை எனவும் சில இடங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் மாதத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கிடைப்பதில்லை எனவும் பரவலாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை எனக்கூறி திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை

இது தொடர்பாக இபிஎஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு பதிவில், ''தமிழ்நாட்டில் உள்ள 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8,722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கம்

ஏற்கனவே துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்ட போதே, இந்த அரசை எச்சரித்தும், மிகுந்த மெத்தனப் போக்குடன் தான் செயல்பட்டது. திமுக ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது போலும்.

அத்தியாவசிய பொருட்களை கூட சேர்க்க முடியவில்லையா?

நெல் கொள்முதல் முதல், கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில் கூட Total Failure ஆக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக கோதுமை ரேஷன் கடைகளுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.