கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
Karur stampede government response ; கரூர் மாவட்டத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கரூர் கூட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட மத்திய அரசு
இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோம் விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
முதலமைச்சர் அவரச ஆலோசனை
இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (27.9.2025) கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன். விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது .
ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும். அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்
தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு
மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும் திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா இலட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்
விசாரணை ஆணையம் அமைத்த தமிழக அரசு
மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.
