பண பட்டுவாடா செய்த காங்கிரஸ் வேட்பாளர்.. விருதுநகரில் அராஜகம்.. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..
விருதுநகரில் காங்கிரஸ்கட்சியின் மகாலட்சுமி திட்ட உத்திரவாத அட்டை மூலம் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் கூறியுள்ளார்.
![Premalatha vijayakanth slams against virudhunagar congress candidate-rag Premalatha vijayakanth slams against virudhunagar congress candidate-rag](https://static-ai.asianetnews.com/images/01htc48rtxtqtq6xfqa4m9hf41/whatsapp-image-2024-04-01-at-11-31-49-am_363x203xt.jpg)
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். தென்மாவட்ட மக்கள் பயன்பெற காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்கப்படும், மதுரை திருமங்கலம் மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவங்க பாராளுமன்றத்தில் அழுத்தம் தரப்படும். மேலும், ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகர் சாலை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்படும், அருப்புக்கோட்டையில் கைத்தறி குழுமம் அமைக்கப்படும், சாய ஆலைகள் பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட 46 தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “விருதுநகர் எங்களது பாரம்பரிய பூர்வீக மண் சொந்த மண்ணில் போட்டியுடுவதை மக்கள் வரவேற்கிறார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமல் போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு-எதிர்க்கட்சிகள் பிரச்சார யுக்தியாக பயன்படுத்துகிறார்கள். மேற்குவங்காலத்தில் மம்தா தனித்து போட்டியிடுகிறார், ஜெயலலிதா இருந்தபோது தனித்து போட்டியிட்டு மோடியா லேடியா என்று சொன்னார். உறுதியாக 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவார்கள். எடப்பாடி பழனிச்சாமி யார் கையை காட்டுகிறாரோ அவர்கள்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது.
நாலு பேர் மட்டுமே கூட்டணியாக உள்ள நாங்கள் நாப்பதும் வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியினர் பெண்களுக்கு 1லட்சம் தரும் மகாலட்சுமி திட்ட வாக்குறுதி அட்டையை மக்களிடம் வழங்கி கையெழுத்து பெற்று தேர்தல் விதிமுறையை மீறிய காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். வாக்குறுதி செய்யலாம் ஆனால் திட்டத்தின் உத்தரவாத அட்டையை வீடு வீடாக விநியோகம் செய்வது முற்றிலும் தேர்தல் விதிமுறை மீறல் ஆகும். 10 ஆண்டுகள் எம்பியாக இருந்த மாணிக்கம் தாகூருக்கு இதுகூட தெரியாத என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பாக 3 இடங்களில் புகார் அளித்துள்ளோம்.
மக்கள் இவர்கள் அளிக்கும் திட்டத்தை நம்பவில்லை. மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யப்பட இந்த ஒரு ஆதாரம் முக்கியமானதாக உள்ளது. டெல்லி தேர்தல் அணையத்திலும் புகார் அளித்துள்ளோம். அனுதாப வேண்டி நாங்கள் எங்கும் பேசவில்லை. எவ்வளவோ பெரிய மன சுமையை மனதில் வைத்துக்கொண்டு பெரிய போராட்டத்தையும் சவால்களையும் எதிர்கொள்கிறோம் என்பது எங்களுக்கும் மட்டும்தான் தெரியும், கேப்டனை தாயக பார்த்த எனக்கும் என் குடும்பத்திற்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்கு தெரியும். அத்தியாவசிய பொருள், சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு போன்றவை பாஜக மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாநில அரசை பொறுத்தவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் மிக பெரும்பாண்மையான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, சொத்துவரி, மின் கட்டணம், பால் கட்டணம் அரிசி விலை உயர்வால் மக்கள் விழி பிதுங்கியுள்ளனர்.மக்கள் வறுமையில் வாடும் நிலை உள்ளது. திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பல தொகுதிக்குள் உள்ளே செல்ல முடியாத நிலையில் விரட்டி அடிகப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கஞ்சா புழக்கம் அதிகரிப்பு போன்றவற்றால் திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மக்களின் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்ற பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியை வரவேற்பதாக தெரிவித்த அவர், ஆனால் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது மக்கள் மத்தியில் கோபம் உள்ளது பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் வாக்குறுதி என்பது தமிழகத்தில் ஏற்கனவே இருந்த திட்டம்தான், அதை எவ்வாறு நடத்துவார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இந்த தேர்தல் என்பது போருக்கு சமமானது. என் மகனை போர்க்களத்திற்கு அனுப்பியுள்ளேன். அவர் போரிட்டு வெற்றி பெருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.