விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த புள்ளகவுண்டன் பட்டி கிராமத்தில் ஏழாயிரம் பண்ணை பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வழக்கம் போல் இன்றும் பணியாளர்கள் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று பகல் நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் இரண்டு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி அருணாச்சலம் என்பவரது மனைவி சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தில் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.