உயிர்பலிகள் அதிகரித்தாலும் துளியும் அச்சமில்லை; சிவகாசியில் 3 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து
சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி பட்டாசு ஆலைகளில் நடத்திய ஆய்வில், விதிமீறலில் ஈடுபட்ட 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார்.
![Officials cancel licenses of 3 factories in Sivakasi for making firecrackers in an unsafe manner vel Officials cancel licenses of 3 factories in Sivakasi for making firecrackers in an unsafe manner vel](https://static-ai.asianetnews.com/images/01hydb3kt08bb65ywxnv4q99pe/whatsapp-image-2024-05-21-at-15-52-29_363x203xt.jpg)
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொடர் வெடி விபத்து ஏற்பட்டு பலர் பலியான சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி வட்டாட்சியர் திருப்பதி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் பகுதியில் உள்ள அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான ராமகிருஷ்ணா பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் பணியாளர்களைக் கொண்டு, சட்ட விரோதமாக மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததும் தெரியவந்தது. மேலும் சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது, சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு உற்பத்தி செய்ததும், பாதுகாப்பு வேலி இல்லாதது, மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, அருகே உள்ள பட்டாசு ஆலைக்கு இடையே குறிப்பிட்ட பாதுகாப்பு தூரம் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாஷாபுரீஸ்வரர் ஆலய தேர் திருவிழா; சிவதாண்டவம் ஆடி பக்தர்கள் உற்சாகம்
அதேபோல் விருதுநகர் அருகே துலுக்கபட்டியில் உள்ள அலங்கார் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தபோது, முழுமையடையாத பட்டாசுகள் மற்றும் வெடிகள் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டு இருந்ததும், சட்ட விரோதமாக தகரசெட் அமைத்தும், மரத்தடியிலும் பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிமீறலில் ஈடுபட்ட 3 பட்டாசு ஆலைகளின் உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தனி வட்டாட்சியர் திருப்பதி பரிந்துரை செய்தார்.