ராஜபாளையத்தில் பாரம்பரியத்தை நினைவூட்ட திருமணத்தில் மணமகளுக்கு நாய் மற்றும் நாய் குட்டியை வழங்கி அசத்திய தாய் மாமன்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகள் வீட்டின் சார்பில் மாமன் சீராக நாய்க்குட்டி மற்றும் நாய் வழங்கப்பட்ட நிகழ்வு உறவினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்த நாள் முதல் அந்தப் பெண் குழந்தைக்கு குழந்தை பிறக்கும் வரை தாய்மாமன் மற்றும் மாமன்மார்கள் சீர் என்கிற பெயரில் பல்வேறு வகையான செய்முறைகளை பணமாகவோ, நகையாகவோ செய்வது வழக்கம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கமானது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து சமுதாய மக்களும் இவ்வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர். சீராக கொடுக்கும் பொருட்கள் மாறினாலும் சீர் கெடுக்கும் பழக்கம் மட்டும் தற்போது வரையில் மாறவில்லை. சீராக கொடுக்கும் பொருட்களின் வரிசையில் அந்த காலத்தில் நாயும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அந்த அடிப்படையில் இன்று இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி- சூர்யா ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.இதில் மணமகள் சூர்யாவிற்கு மணமகளின் மாமன் முறை கொண்ட விஜேஸ்குமார் என்பவர் "கன்னி " என்கிற வகையான நாய் ஒன்றையும் நாய்க்குட்டி ஒன்றையும் சீராக வழங்கினார். 

இதுகுறித்து திருமணத்திற்கு வந்த முதியவர்கள் கூறுகையில் சீராக கொடுக்கும் பொருட்களில் ஒரு காலத்தில் நாயும் இருந்தது குறிப்பிடத்தக்கது என்றும் பெண் குழந்தைக்கு திருமணம் நிச்சயமான நாளிலிருந்து நாய்க்குட்டி ஒன்று புதிதாக வாங்கி அதை வளர்த்து பெண் திருமணமாகி தனது கணவருடன் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது அதை சீராக மாமன்மார்கள் கொடுத்து அனுப்புவார் என்றும் அவ்வாறு கொண்டு செல்லப்படும் வீட்டில் பாதுகாக்கும் "கன்னி" என்கிற வகையைச் சேர்ந்த நாய் மணமகளுக்கு எந்த தீங்கும் மற்றும் அவருக்கு எவ்விதமான ஆபத்தும் வராத அளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்ததாகவும் நவீன காலத்தில் அது மறக்கப்பட்ட நிலையில் தற்போதுள்ள இளைஞர்கள் அந்த கலாச்சாரத்திற்கு உயிர் கொடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அழிப்பதாகவும் தெரிவித்தனர். 

மணப்பெண்ணிற்கு வீட்டுக்கு தேவையான சாமான்கள், தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் சீராக கொடுக்கும் வரிசையில் தற்போது பழைய முறையான நாயும் இணைந்திருப்பது திருமணத்திற்கு வந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.