விருதுநகர் அருகே சாலையோர தடுப்பு கம்பி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விருதுநகர் அருகே சாலையோர தடுப்பு கம்பி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிந்தராஜா குடியிருப்பில் வசித்து வந்த கமலக்கண்ணன் (75), இவரது மனைவி பிரேம்குமாரி (70), மகன் கண்ணன்வேலு (50), கண்ணனின் மனைவி பிந்து (45), கமலக்கண்ணனின் இளைய மகன் ஹேமந்த் (40), கண்ணன்வேலுவின் மகள் வைஷ்ணவி (21), மகன் அபினேஷ் (20) ஆகியோர் சனிக்கிழமை இரவு பெங்களூருவிலிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். 

கார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டை அருகே வந்துக்கொண்டிருந்த போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக ஓடி இரும்பாலான தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தடுப்புச் சுவரிலிருந்த இரும்புப் பட்டை காரின் முன்பக்கம் வழியாகக் குத்திக் கிழித்து, காரின் நடுப்பக்க இருக்கை வரை உள்ளே சென்றதில் காரை ஓட்டிய கண்ணன்வேலு, கமலக்கண்ணன், பிரேம்குமாரி மற்றும் பிந்து ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வைஷ்ணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஹேமந்த், அபினேஷ் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தில் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சாலையோரம் தொடங்கும் தடுப்பு கம்பி அருகே எச்சரிக்கை பலகை வைக்காததும், அதிவேகமாக கார் சென்றதும் விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளனர்.