வேலூர் அருகே சாதி  கொடுமையால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலம் இறக்கப்பட்டு சுடுகாட்டுக்கு கொண்ட செல்லபட்ட சம்பவத்தில் அரசு விசாரணை மேற்கொண்டு சுடுகாடு அமைக்க நிலம் ஒதுக்கியுள்ளது .

வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அடுத்து இருக்கிறது அலசந்தாபுரம் கிராமம் . இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருக்கின்றன . இறந்து போனவர்களின் உடல்களை சாதியை காரணம் காட்டி அந்த வழியாக கொண்டு செல்ல நில உரிமையாளர்கள் அனுமதி மறுத்துள்ளதாக தெரிகிறது .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார் . இதனால் அவருக்கு இறுதிச்சடங்குகளை செய்வதற்காக உடலை சுடுகாட்டிற்கு கிராம மக்கள் கொண்டு சென்றுள்ளனர் .அப்போது தனியார் நிலம் வழியாக செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது . பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது .

இதனால் கிராம மக்கள் குப்பனின் உடலை ஒரு தொட்டிலில் கட்டி , அதை பாலத்தில் தொங்க விட்டு கீழே இறக்கி உள்ளனர் . அதன்பிறகு உடலை சுமந்து சென்று சுடுகாட்டில் எரியூட்டியுள்ளனர் .

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது . பல்வேறு தரப்பில் இருந்தும் இதற்கு கண்டனங்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது .இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வாணியம்பாடி வட்டாச்சியர் , வருவாய்த்துறை ஆட்சியர் , காவல்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணையை செய்தனர் .

அதன்படி அந்த கிராம மக்களுக்காக அரசு சார்பில் நிலம் ஓதுக்கப்பட்டு சுடுகாடு கட்டித் தரப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உறுதி அளித்திருந்தார் .இந்நிலையில், அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து அங்குள்ள புறம் போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில், 50 செண்ட் நிலம், சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது.