Asianet News TamilAsianet News Tamil

தற்கொலை செய்யாதீங்க..இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. நாங்க இருக்கோம் - அமைச்சர் அதிரடி..!

பெண் குழந்தைகளுக்கு அரங்கேறும் பாலியல் அத்துமீறல்களில் இருந்து அவர்களை பாதுகாத்திடும் வகையில் பள்ளி மாணவிகள் தங்களுக்கு நேரும் பாலியல் குறித்தான புகார்களை தெரிவிக்க மாவட்டதோறும் வாட்ஸ் அப் எண்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சமுக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் பெண் குழந்தைகள், மாணவியர்கள் தங்கள் பிரச்சனைகள் மற்றும் புகார்களை உடனடியாக இந்த அவசர எண் மூலம் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார். 
 

Minister Geetha jeevan press meet
Author
Tuticorin, First Published Nov 25, 2021, 8:47 PM IST

பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் மாணவிகள், தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, தங்கள் மேல் தவறு உள்ளதாக நினைத்து யாரிடம் சொல்லாமல் குற்றவுணர்ச்சியில் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். கடந்த காலங்களில் பாலியல் குற்றங்களில் மாணவிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் கோவை மாணவி தற்கொலை, கரூர் மாணவி தற்கொலை போன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், மாணவிகள் தங்களுக்கு பிரச்சனை நேர்ந்தால் துணிச்சலுடன் புகார் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதை பார்க்க முடிகிறது.  அந்த வகையில் தற்போது சமூக நலத்துறை அமைச்சர், பெண்குழந்தைகள் மற்றும் மாணவிகள் பாலியல் குறித்தான புகார்களை தெரிவிக்க மாவட்டதோறும் வாட்ஸ் அப் எண்கள் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண் குழந்தைகள், மாணவியர்களை பாதுகாத்திடும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.  பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடந்தது.  இந்நிகழ்ச்சியில், கலந்துக்கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள் குறித்து புகார் தெரிவித்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் 93748-10811 என்ற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த எண்ணில், பெண் குழந்தைகள், மாணவியர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த புகார்களை பதிவு செய்யலாம் எனவும் புகார் தொடர்பான விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், குழந்தை திருமணம் தடுத்தல், பள்ளி கல்வியில் இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என அனைத்து குற்ற நிகழ்வுகளையும் இந்த எண்ணில் பதிந்து உடனடியாக தீர்வு காணலாம் என்று கூறிய அவர், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த ஆட்சியர் தலைமையில் வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்ய உத்தரவிடப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழந்தை திருமணங்கள் தடுக்க வேண்டுமெனவும் பெண் குழந்தைகளை பாலியல் குற்ற நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார் என்றார். மேலும் இது தொடர்பான புகார்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் கூறியுள்ளதாக தெரிவித்தார். அதன்பேரில் பெண் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவுடன் சமூக நலத்துறை இணைத்து பெண் குழந்தைகளுக்கு எதிரான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களில் பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை ஒப்பிடும் போது அதிகரித்துள்ளதாக கூறிய அமைச்சர், கல்வித்துறையுடன் இணைந்து அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios