Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு மாணவனுக்காகப் பள்ளி நடத்தும் தமிழ்நாடு: கனிமொழி பெருமிதம்!

ஒரே ஒரு மாணவனுக்காகப் பள்ளிக்கூடத்தை நடத்தும் மாநிலம் தமிழ்நாடு என தேர்தல் பிரசாரத்தில் பேசிய கனிமொழி பெருமிதம் தெரிவித்துள்ளார்

Kanimozhi karunanidhi pride over Tamil Nadu a state that runs a school for only one student smp
Author
First Published Apr 11, 2024, 8:57 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோரம்பள்ளம் ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி மற்றும் இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தின் போது பேசிய கனிமொழி கருணாநிதி, “தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடு. கொரோனா காலத்திலும் இங்கு வந்து பணியாற்றி உள்ளேன். மழை வெள்ள பாதிப்பு வந்த போதும் உங்களோடு நின்று உங்களோடு பணியாற்றியுள்ளேன் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

“தாமிரபரணி ஆற்றின் வடிகால் பாசனம் கடைசி சேரும் குளம், கோரம்பள்ளம். அதை தூர் வருவதற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்து தூர்வாரப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற தொகுதி மேம்பட்டியிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதிக்காக கிணறு அமைத்து பைப்லைன் போடப்பட்டு, அந்தப் பணிகள் தேர்தல் முடிவுகள் முடிந்தவுடன் விரைவில் தொடங்கப்படும்.” என கனிமொழி உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பதநீர் கடையை வைத்து, விற்பனை செய்து அதில் வரக்கூடிய வருமானத்தை வைத்து ஒரு பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகப் பெருமையான ஒரு விஷயம் கல்விக்கு நீங்கள் தரக்கூடிய முக்கியத்துவத்தை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.

புதிய கல்வி கொள்கையை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு பொறுத்த வரைக்கும் சில கிராமங்களில், முக்கியமாக மலைக் கிராமத்தில் மாணவர்கள் பள்ளியில் அதிகமாக இருக்க மாட்டார்கள். ஒரு முறை ஒரே ஒரு மாணவன் தான் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான், அந்தப் பள்ளிக்கூடத்தை மூடலாம் என்று அதிகாரிகள் சொன்னபோது, அந்த ஒரு மாணவனுக்காக நாங்கள் பள்ளிக்கூடத்தை நடத்துவோம் என்று சொன்னது இந்த தமிழ்நாடு. ஒரே மாணவருக்காகப் பள்ளிக்கு நடத்தப்பட்டு, நடத்தியும் வருகிறது.” என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், “புதிய கல்வித் கொள்கையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடிவிட்டு அவர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வந்து பள்ளி நடத்துகிறோம் என்கின்றனர். ஆனால் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  திராவிட இயக்கம் நமக்குக் கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளது. திராவிட இயக்கம் நமது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக இட இடஒதிக்கீடு சண்டை போட்டு நமக்கு வாங்கி கொடுத்துள்ளது. ஆனால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக இதே உரிமைகளை நம்மிடம் இருந்து பறிக்க நினைக்கிறது.” என கனிமொழி குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகம் வருகை!

நீட் தேர்வைக் கொண்டு வந்து, கலைஞர் கட்டிய மருத்துவக் கல்லூரியில் நமது பிள்ளைகளுக்கு இடமில்லை என்கின்றனர். மதக் கலவரத்தை உருவாக்கி அதில் ஓட்டு வாங்கி விடலாமா? என்று நினைக்கக்கூடிய ஆட்சி பாஜக ஆட்சி. பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் நிம்மதியாக மக்கள் வாழ முடியுமா மணிப்பூரை மறக்க முடியுமா? என கனிமொழி கேள்வி எழுபினார்.

பிரதமர் தேர்தலுக்காகத் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார். ஒன்றிய அரசு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டிய கனிமொழி, தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்கவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 20 நாள், 25 நாள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். அதற்கும் சம்பளம் வருவது கிடையாது. இது மக்களுக்கான திட்டம் என்பதை மறந்து காங்கிரஸ் திமுக ஆட்சியில் கொண்டு வந்தது என்று நிறுத்த நினைக்கின்றனர் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios