உயர் நீதிமன்றம் மதுரை கிளை இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு, இந்த விவகாரம் வேகம் பிடித்தது. நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் விசாரணையை அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய போலீஸார் மீது கவனம் திரும்பியது. வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதை தீவிரமாக கண்காணித்தது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், காவலர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஜெயராஜ், பெனிஸ் இறந்த வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்துள்ளது சிபிஐ.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்தது.

