வெள்ளம் வடியாததால் தூத்துக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாததால் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![Announcement of local holiday tomorrow in Tuticorin district sgb Announcement of local holiday tomorrow in Tuticorin district sgb](https://static-ai.asianetnews.com/images/01hj181qvfmmv7jmxm0vyqkgmg/thoothukudi-local-holiday_363x203xt.jpg)
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாத காரணத்தால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால், குடிநீர், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் துறைகளுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற காரணத்தால், நாளையும் (டிசம்பர் 20) தூத்துக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மின் மோட்டார் மூலமாக தேங்கியிருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில், 25 பேரிடர் மீட்புக் குழுவினர், 150 ராணுவ வீரர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நிவாரண முகாம்களிலும் உள்ள 26 ஆயிரம் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு உணவுப் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன. மீட்புப் பணிகள் முழுமையாக முடிய ஒரு வார காலம் ஆகும் என்று மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கூறியிருக்கிறார்.
தூத்துக்குடியில் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர் என்றும் கலெக்டர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.