ஆம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த எட்டாம் வகுப்பு  பள்ளி மாணவி தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி  பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் இரண்டாவது தார்வழி பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் வெங்கடேசன். இவரது மகள் மதுமிதா (வயது 13). இவர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவியை ஆங்கில ஆசிரியர் நூர்அஹமத் வகுப்பறை பலகையில் விடுமுறை விண்ணப்பம் எழுத சொல்லியும், மாணவி கையில் மருதாணி வைத்திருந்ததை கண்டித்தும் ஆசிரியர் மாணவியின் கையைப் பிடித்து திருப்பி பலமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் ஆசிரியர் தாக்கியதில் கை மணிக்கட்டுப் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவி வகுப்பறையில் சோர்வாக இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி சோர்வுடன் இருந்ததை கண்டு பெற்றோர் விசாரித்த போது, ஆசிரியர் தாக்கியதில் கையில் பலத்த காயமடைந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு மாணவியை பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். 

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக பலி

மாணவியை தாக்கியது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்வதாக தலைமை ஆசிரியர் தெரிவித்த நிலையில், தொடர்ந்து இதுபோன்று பலமுறை பல மாணவிகளை தாக்கி வரும் ஆங்கில ஆசிரியர் நூர்அஹமத் மீது நடவடிக்கை இல்லை என கூறி பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லால் சலாம் ரஜினியை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்திய இளைஞர்; வைரல் வீடியோ!!

பின்னர் தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆம்பூரில் பள்ளி மாணவியை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியரை பணியிடம் மாற்றம் செய்யக்கோரி பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியில் திரண்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.