திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த ஸ்ரேயா என்ற திருநங்கை, ஆடை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் எதிர்வீட்டைச் சேர்ந்த தந்தை, மகனால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயா (40). திருநங்கையான இவர் காலேஜ் ரோடு பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் ஸ்ரேயா தனது பெட்டிக்கடையில் அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்வீட்டில் வசித்துக்கொண்டு சலூன் கடை வைத்து நடத்தி வரும் சுப்பிரமணியம் என்பவர் தன் வீட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளதால் இது போன்று அமர வேண்டாம் என திருநங்கை ஸ்ரேயாவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஸ்ரேயாவிற்கும் சுப்பிரமணியின் குடும்பத்திற்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான பிரச்சனையில் ஸ்ரேயா கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் காப்பாற்றிய நிலையில் அவர் மீண்டும் பெட்டிக்கடை வியாபாரத்தை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மீண்டும் ஸ்ரேயாவிற்கும் எதிர்வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவருடைய மகன் சரவணன் ஆகியோர் சேர்ந்து ஸ்ரேயாவை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளனர். ஸ்ரேயாவும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஸ்ரேயாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த திருநங்கை ஸ்ரேயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியம் (63), சரவணன் (39) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்த திருநங்கையை தந்தை, மகன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


