Asianet News TamilAsianet News Tamil

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்து வாங்குவது அந்த காலம்; கையெழுத்துடன் விற்கப்படும் கடன் விண்ணப்பம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெயர் கூட எழுதப்படாத நிலையில் அரசு மருத்துவரின் சீல், கையெழுத்துடன் விற்பனை செய்யப்படும் கடன் விண்ணப்பங்களால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி.

loan application forms supplied with government doctor seal and signature in theni district collector office
Author
First Published Jul 26, 2023, 4:17 PM IST

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  பெண்கள் கும்பலாக நின்று யாரோ ஒரு நபரிடம் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக் கொண்டிருந்தனர். அது குறித்து விசாரித்த போது, ஆடு வளர்ப்பு கடன் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் மற்றும் திட்ட அறிக்கை பெற்றுக் கொண்டிருப்பதாக பெண்கள் தெரிவித்தனர்.

பொதுவாக இதுபோன்ற திட்ட அறிக்கையினை சம்பந்தப்பட்ட மருத்துவர் அல்லது அரசு அதிகாரியிடம் அவரது அலுவலகத்தில் வைத்து தான் வழங்க வேண்டும். ஆனால், மரத்தடியில் வைத்து விநியோகம் செய்யப்பட்டதால் சந்தேகமடைந்து அதனை வாங்கி பார்த்துள்ளனர். அந்த திட்ட அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ்களில் எந்த ஒரு பயனாளியின் பெயரும், மற்ற எந்த விவரங்களும் குறிப்பிடாமல் அன்பழகன் என்ற கால்நடை மருத்துவரின் கையொப்பம் மற்றும் அவரது சீல் வைக்கப்பட்டிருந்தது.

திருச்சி அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் மாயம் - காவல்துறையினர் விசாரணை

இதுகுறித்து அதனைப் பெற்றுக் கொண்டிருந்த பெண்களிடம் விசாரித்த போது தாங்கள் தாட்கோவில் ஆடு வளர்ப்புக்கு கடன் வாங்க விண்ணப்பித்திருப்பதாகவும் இந்த சான்றிதழ்கள் கட்டாயம் வாங்கி வருமாறு தாட்கோ மேலாளர் தெரிவித்ததாகவும், இதனால் நபர் ஒன்றிற்கு ரூபாய் 500 முதல் 800 வரை கொடுத்து இந்த திட்ட அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.

ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் பயன் பெறுவதற்காக தாட்கோ மூலமாக மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை முறையான பயனாளிகளுக்கு சென்று சேரவிடாமல் இது போன்ற இடைத்தரகர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு தகுதியற்ற பயனாளிகளுக்கு திட்டத்தை பெற்றுத் தருவதாக கூறப்படுகிறது.

மேலும் தகுதியுடைய பயனாளிகள் கூட இதுபோல இடைத்தரகர்கள் இடம் வந்து பணம் கொடுத்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகளை பெறும் அவல நிலை நீடிக்கிறது. இது தவிர ஆடு வளர்ப்பு லோன் பெரும் பயனாளிகள் யாரும் கடன் பெற்று ஆடுகள் வாங்குவதில்லை என்றும், ஆடு வளர்க்கும் விவசாயிகளிடம் சென்று ஒரு ஆட்டிற்கு ரூபாய் 400 வீதம் லஞ்சம் கொடுத்து ஆட்டின் காதில் சீல் வைக்க அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்து ஆடுகள் எதுவும் வாங்காமலேயே ஆடு வளர்ப்பு லோன் பெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றார்கள்.

6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கனுடன் தடல் புடலாக தயாராகும் அசைவ விருந்து; திமுக கூட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

இதற்கு தாட்கோ மேலாளரும் உடந்தையாக இருப்பதுடன், அவருக்கும் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக செல்வதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றார்கள். தேனி மாவட்ட ஆட்சியர்  உடனடியாக உரிய விசாரணை நடத்தி தாட்கோ மேலாளர், கால்நடை மருத்துவர்  மற்றும் இடைத்தரகர்  உட்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios