போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவிட்டனர் - அமைச்சர் ரகுபதி
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அவசரப்பட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
![minister ragupathy comments about transport workers strike in pudukkottai district vel minister ragupathy comments about transport workers strike in pudukkottai district vel](https://static-ai.asianetnews.com/images/01hembf8cp8mh7masn6yag7z2h/whatsapp-image-2023-11-07-at-13-07-41_363x203xt.jpg)
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதை ஒட்டி தமிழகத்தில் சென்னை திருச்சி, மதுரை, கோவை, ஆகிய நான்கு இடங்களில் 26 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. போட்டிகள் குறித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரசார வாகனம் இன்று புதுக்கோட்டைக்கு வருகை தந்தது.
பிரசார வாகனத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன் பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற மினி மாரத்தான் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, போக்குவரத்து தொழிற்சங்ககளிடம் கால அவகாசம் தான் கேட்டோம் இல்லை என்று கூறவில்லை.
பொங்கலுக்கு பிறகு பேச்சு வார்த்தை நடலாம் என்று கூறினோம். அதற்கு முன்னதாகவே போக்குவரத்து தொழிலாளர்கள் அவசரப்பட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். ஒரு பேச்சுவார்த்தைக்கு பின்பு தான் அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தெரியவரும். ஆனால் அதற்கு முன்னதாகவே இவர்கள் போராட்டத்தை தொடங்கி இருப்பது வருடத்திற்கு ஒன்றாக அமைந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் இந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சாத்தியமாக இருக்காது. அவசரக் கதையில் பாஜக அரசு கொண்டு வந்தாலும், அடுத்து மத்தியில் அமையப் போவது இந்தியா கூட்டணி ஆட்சி தான். நாங்கள் பார்த்துக் கொள்வோம். கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் நடைபெற்ற முதலீட்டார்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 6.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.