பெரம்பலூர் அருகே காரும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பெரம்பலூர் - துறையூர் சாலையில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த 14 பேரில் 8 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர காவல் துறையினர் நடத்திய விசாரணையில் காரில் வந்த நபர் திருச்சி மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. செந்தில் குமார் துறையூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி காரில் அதி வேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது. 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்... 12 மணி நேரத்தில் மீட்பு; கடத்திய பெண் கைது!!

அப்போது நாமக்கலைச் சேர்ந்த திருநாவுக்கரசர் என்பவர் ஓட்டி வந்த வேனில் பயணித்த 14 பேர் பெரம்பலூர் அருகே நீலியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு துறையூர் நோக்கி எதிர் திசையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் காரின் முன்பக்கம் பயங்கர சேதமடைந்ததில் காரில் வந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனின் முன்பக்கம் சேதமடைந்ததால் அதில் பயணித்த 14 பேரில் 8 பேர் காயமடைந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம்... விளக்கம் அளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி!!

இறந்தவரின் உடலை தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் பெரம்பலூர் துறையூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.